கம்பன் எக்ஸ்பிரஸ் வரும்! ஆனால் வராது!!

''விருந்தாளிக்கு என்ன தெரியும்?'' - டி.ஆர்.பாலுவுடன் மல்லுக்கட்டும் பழனிமாணிக்கம்

'மக்களுக்கு எது தேவை என்பது உள்ளுர்க்காரனுக்குத்தான் தெரியும். விருந்தாளியா வந்து போறவருக்கு எதுவும் தெரியாது’ என்று, டி.ஆர்.பாலுவுக்கு எதிராக மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் சீறி இருப்பது, தி.மு.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், தஞ்சை மாவட்டத் தி.மு.க. செயலாளருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலுவுக்கும் சில ஆண்டுகளாகவே கட்சிக்குள் பனிப் போர் நடந்து வருகிறது. டி.ஆர்.பாலுவின் சொந்த ஊரான தளிக் கோட்டை கிராமம், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கிறது. இதனால், டி.ஆர்.பாலு தஞ்சை ஏரியாவில் கால் பதிக்க ஆசைப்பட்டார். 
சட்டமன்றத் தேர்தலில், தன் மகன் டி.ஆர்.பி.ராஜாவை மன்னார்குடி தொகுதியில் போட்டியிட வைத்து, வெற்றியும் பெற வைத்தார். மன்னார்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மன்னார்குடி - நீடாமங்கலம் புதிய ரயில்பாதையை டி.ஆர்.பாலு கொண்டு வந்ததும், ஏரியாவில் பரபரப்பு கூடியது. 
'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு போட்டியிடுவதற்காகத்தான் இப்போதே வியூகம் வகுக்கிறார்’ என்ற செய்தி டெல்டாவில் பரவ ஆரம்பித்தது. இந்த நிலையில், மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதைத் திட்டத்தைக் கொண்டுவர டி.ஆர்.பாலு முயற்சித்தார். நில அளவைகளும் எடுக் கப்பட்டன. 
மன்னார்குடி - பட்டுக்கோட்டை ரயில் பாதையால் பாதிக்கப்படுபவர்கள், இந்தத் திட்டத்தை எதிர்க்க ஆரம்பித்தனர். இது தொடர்பாக பட்டுக் கோட்டையில் ஏப்ரல் 1-ம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், 'பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் திட்டத்தால், இந்தப் பகுதி மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. 
அதனால் 99.99 சதவிகிதம் இந்தத் திட்டம் நிறைவேறாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கு உள்ள மக்களுக்கு என்னென்ன தேவைகள் என்பது உள்ளுர்க் காரனுக்குத்தான் தெரியும். விருந்தாளியாக வந்து போகிறவருக்கு எதுவும் தெரியாது. எனக்கு நல்ல அரசியல் அனுபவம் உண்டு. எந்தப் பிரச்னையிலும், யாரிடமும் நான் மல்லுக்கட்டி நிற்க மாட்டேன். இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்பதை ரயில்வே துறை புரிந்துகொண்டு, நடைமுறைக்குப் பொருந்தாதவற்றைச் செய்ய வேண்டாம்.
மன்னார்குடி வரை குறுகிய பாதையை அகலப் பாதையாக மாற்றினீர்கள். அதில் தவறு இல்லை. உங்கள் பணியை அத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்' எனப் பேச்சை நிறுத்தி, அருகில் இருந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்திலிங்கத்தை அர்த்தபுஷ்டியோடு பார்த்தார்.
தொடர்ந்து பேசிய பழனிமாணிக்கம், 'விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி, வீடுகளை இடித்து, புதிய ரயில் பாதை அமைக்க முயற்சிப்பது தேவை இல்லாதது. இதில் பாதிக்கப்பட்டோர் சும்மா இருக்க மாட்டார்கள். நிச்சயம் நீதிமன்றத்துக்குச் செல்வார்கள். மக்களைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். மக்கள் அச்சமடைய வேண்டாம்' எனப் பேசி கை தட்டல் வாங்கினார்.
'டி.ஆர்.பாலுவின் வடசேரி ஃபேக்டரிக்கு எதிராக மக்கள் போராடி, அந்த ஃபேக்டரியை வரவிடாமல் செய்தனர். அதைத் தூண்டிவிட்டதே பழனிமாணிக்கம் தரப்புதான் என டி.ஆர்.பாலு நினைத்தார். அதனால், மன்னார்குடியில் தனது செல்வாக்கை வளர்க்க விரும்பி, அங்கு தன் கவனத்தைத் திருப்பினார். 
தனது குடும்பத்தினர் மூலம் கல்வி உதவித் தொகை, கோயில்களுக்கு நன்கொடை கொடுத்தவர், தன் மகன் ராஜாவுக்கு மன்னார்குடியில் ஸீட் வாங்கி எம்.எல்.ஏ-வாகவும் ஆக்கினார். ராஜாவின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதால், படு வேகமாக டி.ஆர்.பாலுவுக்கு செல்வாக்கு கூடியது. அதனால், பழனிமாணிக்கத்துக்கு எதி ராக உள்ள சில தி.மு.க. பொறுப்பாளர்கள், 'அடுத்த மாவட்டச் செயலாளராக டி.ஆர்.பாலுவைக் கொண்டுவர வேண்டும்’ என்று தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோபம்தான் பழனிமாணிக்கத்தை இப்படித் துள்ளி எழ வைத்துள்ளது' என்று தி.மு.க. நிர்வாகிகள் சொல்கிறார்கள். 
இதையடுத்து, மன்னார் குடியில் தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகள் சார்பில் பழனிமாணிக்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த புவனேஸ்வரி, ''தொகுதிப் பக்கமே வராத பழனிமாணிக்கத்துக்கு எங்களுடைய தேவைகள் பற்றித் தெரியாது. பல ஆண்டுக் கோரிக்கையான ரயில் பாதைத் திட்டத்தை, உட்கட்சி பிரச்னைக்காக எதிர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என ஆவேசப்பட்டார்.
 டி.ஆர்.பி.ராஜா, 'மன்னார்குடி மக்களின் 40 ஆண்டு கால கனவுத் திட்டமான மன்னார்குடி ரயில்பாதைத் திட்டம் என்அப்பாவால் நிறைவேற்றப்பட்டது. பட்டுக்கோட்டை மக்கள், தொண்டு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதின் பேரில்தான், பட்டுக் கோட்டை - மன்னார்குடி ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காக மக்கள் நலத் திட்டத்தைத் தடுக்க நினைக் கிறார்கள். நிச்சயம் இந்தத் திட்டம் செயல் படுத்தப்படும். 
அரியலூர் - தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரயில் பாதையும் அப்பாவின் தீவிர முயற்சியால் கொண்டு வரப்படும்' என்றார் நிதானமாக. 
ஆஹா... ஆரம்பிச்சுட்டாங்கப்பா!
 - சி.சுரேஷ் படங்கள்: கே.குணசீலன்
நன்றி: ஜூனியர் விகடன்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!